11/08/2026
❓ கிரைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த ரத்து சட்டப்படி செல்லாது என்ற விளம்புகை பரிகாரம் கோராமல் ஏற்றதை ஆற்றக் கோரிய வழக்கு நிலைக்குமா; ஒப்பந்த காலக்கெடு முடிந்த பின்னர் கடன் பெற்று, ஆறு ஆண்டுகள் கழித்து மீதி தொகையை செலுத்தியது வாதியின் தயார்நிலையை நிரூபிக்குமா?
இவ்வழக்கில், முதல் வாதி 29.08.2003 அன்று இரு ஆவணங்கள் மூலம் வாடகை ஒப்பந்தம் செய்து, ரூ.7,00,000 முன்பணமும் மாதம் ரூ.9,000 வாடகையும் என்ற நிபந்தனையில் வழக்குச் சொத்தில் இருந்து வந்தார். பின்னர் சொத்தை விற்க முன்வந்ததாகக் கூறி, 10.04.2007 தேதியிட்ட கிரைய ஒப்பந்தம் (Ex.A3) ஏற்பட்டதாகவும், அன்றே ரூ.22,00,000 முன்பணமாக பெறப்பட்டதாகவும் வாதிகள் தெரிவித்தனர். ஆனால் Ex.A3-க்கு நகல் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் பின், 30.08.2007 தேதியிட்ட கிரைய ஒப்பந்தம் (Ex.A4) ரூ.16,48,000 கிரையத் தொகைக்கு எழுதிக் கொடுக்கப்பட்டு, ரூ.3,20,000 முன்பணமாக பெறப்பட்டது; மீதி ரூ.13,28,000 இரண்டு மாதங்களுக்குள், அதாவது 30.10.2007-க்குள் செலுத்தப்பட வேண்டும் என நிபந்தனை இருந்தது. அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி O.S.No.15 of 2008 தாக்கல் செய்யப்பட்டது.
பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலுரையில், Ex.A3 புனையப்பட்ட ஆவணம் என மறுக்கப்பட்டது. வாதி வாடகைதாரர் மட்டுமே என்றும், கிரைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுபவ உரிமை ஒப்படைக்கப்படவில்லை என்றும், வாடகை செலுத்தாத காரணத்தால் R.C.O.P.No.22 of 2008 தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. காலக்கெடுவுக்குள் வாதி மீதி தொகையை செலுத்தத் தவறியதால், Ex.A5 அறிவிப்பு மூலம் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், எனவே ஏற்றதை ஆற்றக் கோரிய வழக்கு நிலைக்காது என்றும் வாதிடப்பட்டது. விசாரணை நீதிமன்றம், Ex.A5 ஒருதலைப்பட்சமான ரத்து என்றும் அது வாதியை கட்டுப்படுத்தாது என்றும் கூறி 31.07.2015 அன்று வழக்கை ஏற்று தீர்ப்பாணை வழங்கியது. அதனை எதிர்த்தே இந்த மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
நீதியர் ஈராயம் (Division Bench) முதலில் வழக்கின் நிலைத்தன்மையை ஆய்வு செய்தது. உச்சநீதிமன்றத்தின் Sangita Sinha v. Bhawana Bhardwaj (2025 INSC 450) தீர்ப்பில், I.S.Sikandar v. K.Subramani (2013) 15 SCC 27, A.Kanthamani v. Nasreen Ahmed (2017) 4 SCC 654 மற்றும் R.Kandasamy v. T.R.K.Saraswathy ஆகிய தீர்ப்புகளுக்கு இடையிலான நிலைப்பாடு ஆராயப்பட்டு, ஒப்பந்தம் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே ரத்து செய்யப்பட்டிருந்தால், அந்த ரத்து சட்டப்படி செல்லாது என்ற விளம்புகை பரிகாரம் கோராத நிலையில் ஏற்றதை ஆற்றக் கோரிய வழக்கு நிலைக்காது எனக் கூறப்பட்டுள்ளது. கீழ்நீதிமன்ற ஆவணங்களையும் வழக்குரையையும் பரிசீலித்த நீதிமன்றம், Ex.A5 அறிவிப்பு சட்டப்படி செல்லாது என்ற விளம்புகை எந்த இடத்திலும் கோரப்படவில்லை எனக் கண்டறிந்து, விளம்புகை பரிகாரம் கோராதது வாதியின் வழக்கை பாதிக்கும் என முடிவு செய்தது.
ஒருதலைப்பட்ச ரத்து குறித்த விசாரணை நீதிமன்றத்தின் கண்டறிதலும் ஏற்கப்படவில்லை. இந்திய ஒப்பந்தச் சட்டம் சட்டப்பிரிவு 39-இன்படி, மற்றொரு தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற முன்வராத நிலையில் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை பிரதிவாதிக்கு இருந்தது என்றும், ரத்து செய்வதற்கு முன் அறிவிப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை ஒப்பந்தத்தில் இல்லை என்றும் நீதிமன்றம் கூறி, அந்தக் கண்டறிதலை நீக்கியது.
தயார்நிலை மற்றும் விருப்பம் குறித்த ஆய்வில், வாதியின் குறுக்கு விசாரணை ஒப்புதல்களே அவருக்கு எதிராக அமைந்தன. ஒப்பந்த காலக்கெடு 30.10.2007 அன்று முடிந்த நிலையில், வங்கிக் கடன் 12.11.2007 அன்றுதான் அனுமதிக்கப்பட்டது என வங்கி மேலாளர் (P.W.3) தெரிவித்தார். காலக்கெடுவை நீட்டித்துத் தருமாறு பிரதிவாதிக்கு எந்த அறிவிப்பும் அனுப்பப்படவில்லை; கடன் அனுமதிக்கப்பட்ட பின்னரும் கிரையத்தை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக அறிவிப்பு அனுப்பப்படவில்லை; Ex.A6 பதில் அறிவிப்பிலும் தயார்நிலை குறித்து எதுவும் கூறப்படவில்லை. தயார்நிலை என்பது தரப்பினரின் முயற்சியையும் பொருளாதார சூழ்நிலையையும் குறிக்கிறது; விருப்பம் என்பது கிரையத்தை நிறைவேற்றும் நோக்கத்தைக் குறிக்கிறது என நீதிமன்றம் விளக்கியது. ஒப்பந்தம் 18.12.2007 அன்று ரத்து செய்யப்பட்ட நிலையில், மீதி ரூ.13,28,000 ஆறு ஆண்டுகள் கழித்து 2013-ல் மட்டுமே நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது; எனவே கிரையத்தை நிறைவேற்றும் பொருளாதார சூழ்நிலை வாதிக்கு இருந்ததில்லை என முடிவு செய்யப்பட்டது.
பகுதி நிறைவேற்றத்தின் அடிப்படையில் அனுபவ உரிமை ஒப்படைக்கப்பட்டது என்ற வாதமும் ஏற்கப்படவில்லை. Ex.A4 பதிவு செய்யப்படாத ஆவணம் என்பதும், சொத்து மாற்றுச் சட்டம் சட்டப்பிரிவு 53(A)-இன் பயனை பெற ஆவணம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், அனுபவ உரிமை ஒப்படைப்பு குறித்து Ex.A4-ல் எந்தக் குறிப்பும் இல்லை; வாடகைக்கு விடுபவர் மற்றும் வாடகைதாரர் என்ற உறவே தொடர்வதாக வாதியே குறுக்கு விசாரணையில் ஒப்புக்கொண்டிருந்தார். வழக்கு Ex.A4 அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தும், நீதிமன்றக் கட்டணம் Ex.A3-ல் உள்ள தொகையின் அடிப்படையில் செலுத்தப்பட்டது; வாடகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கை உள்ளிட்ட பிற வழக்குகளில் வாதி முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுத்திருந்தார்.
ஏற்றதை ஆற்றக் கோரும் பரிகாரம் நீதிமன்றத்தின் முடிவிற்கு உட்பட்டது என்றும், கிரையத்தை நிறைவேற்றி தனது தயார்நிலையை நிரூபிக்கும் பொறுப்பு வாங்குபவரையே சாரும் என்றும் நீதிமன்றம் கூறியது. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட பின், விளம்புகை பரிகாரம் இல்லாத நிலையில் Ex.A4 சட்டத்தின் பார்வையில் "non est" ஆகிவிடுகிறது எனத் தெரிவித்து, குறித்தவகை பரிகார சட்டம் சட்டப்பிரிவு 16(c)-இன் தேவைகளையும் வாதி பூர்த்தி செய்யவில்லை என முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில், மேல்முறையீடு அனுமதிக்கப்பட்டு, 31.07.2015 தேதியிட்ட தீர்ப்பும் தீர்ப்பாணையும் ரத்து செய்யப்பட்டு, O.S.No.15 of 2008 தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பின் மூலம், **"வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே கிரைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருந்தால், அந்த ரத்து சட்டப்படி செல்லாது என்ற விளம்புகை பரிகாரம் கோராமல் ஏற்றதை ஆற்றக் கோரிய வழக்கு நிலைக்காது; காலக்கெடுவுக்குள் தொகையை செலுத்தாமலும், தயார்நிலையை காட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமலும் இருப்பவர் இப்பரிகாரத்தை பெற உரிமை இல்லை"** என்ற சட்டக் கொள்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
---
**Court:** Madurai Bench of Madras High Court
**Case No.:** A.S.(MD)No.234 of 2015 and M.P.(MD)No.1 of 2015
**Parties:** Gana.Kannappan v. G.Mohanlal Patel & Another
**Coram:** Justice RMT.Teekaa Raman and Justice N.Senthil Kumar
**Reserved on:** 30.01.2025
**Date of Judgment:** 25.04.2025
**Citation:** 2025 (3) CTC 306